மணல் அகழ்வு மோசடி சம்பவத்தின் பின்னணியில் இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் இருக்கின்றமை தெரியவந்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
சிலாபம் மணல் நிறுவனத்திற்குச் சொந்தமான பளை என்ற பகுதியில், ஒதுக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது ஒரு பாரிய மோசடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 400 மில்லியன் ரூபா ஊழல் பரிவர்த்தனை மற்றும் மோசடி நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் இந்த மோசடிக்கு இறுதியில் யார் பொறுப்பு என்று சொல்ல முடியாது,
ஆனால் இரண்டு முக்கிய அரசியல்வாதிகள் இதில் ஈடுபட்டுள்ளனர். பல ஒப்பந்ததாரர்கள் பற்றிய தகவல்களும் எமக்கு கிடைத்துள்ளன.
இது தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெறுகின்றன என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.





