பரந்தனில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று பயணிகளை அலைக்கழித்து, கூடுதல் கட்டணமும் ஈட்டியதாக வவுனியா தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) காரியாலயத்தில் பயணிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.
பரந்தனில் இருந்து இன்று புறப்பட்ட NP 7487 இலக்கமுடைய இப்பேருந்து கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்தில் காலை 09:20 மணி வந்தடைந்து தரித்து நின்றது.
அங்கிருந்து காலை 09:30 மணி வவுனியா நோக்கிப் பயணிக்க வேண்டிய பேருந்து, திட்டமிட்டபடி பயணிக்காமல், திடீரென மீண்டும் பரந்தன் நோக்கியே திரும்பிச் சென்றுள்ளது.
பரந்தனுக்குச் சென்று மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்து தரித்து நின்று வவுனியாவை வந்தடைந்த போது மணி மதியம் 12:15 ஆகி இருந்தது.
கிளிநொச்சியில் இருந்து காலை 09:30 மணிக்கு வவுனியா வந்தடைந்திருக்க வேண்டிய பயணிகள், பேருந்தின் இந்தத் தன்னிச்சையான பின்னோக்கிய பயணத்தால் 2 மணித்தியாலங்கள் 45 நிமிடங்கள் (2 Hours 45 Minutes) தாமதமாகவே வவுனியாவை வந்தடைந்துள்ளனர். இதனால் பயணிகள் அனைவரும் கடும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
காலதாமதம் மட்டுமன்றி, பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பேருந்துக் கட்டணச் சீட்டில் (Ticket) 300 ரூபாய் என அச்சிடப்பட்டிருந்த போதிலும், பயணிகளிடம் இருந்து தலா 330 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி மேலதிகமாக 30 ரூபாய் வசூலிக்கப்பட்டமை பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விடயம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட வவுனியா பயணிகளால், வவுனியாவில் அமைந்துள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு காரியாலயத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறையான நேர முகாமைத்துவம் இன்றியும், பயணச்சீட்டு விதிகளுக்கு முரணாகவும் செயற்பட்ட குறித்த பேருந்து நிர்வாகத்திற்கு எதிராக உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





