மன்னாரில் திருட்டு பழி சுமத்திய 14 வயது சிறுவன் தற்கொலை- கொலை என தாயார் சந்தேகம்!

மன்னார் – கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது-14) எனும் சிறுவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவருடைய சடலம் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கள்ளியடியிலுள்ள கிராம அலுவலகர் ஒருவரின் அரிசி ஆலை ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பான முரண்பாட்டின் காரணமாவே குறித்த சிறுவன் தற்கொலை செய்துள்ளதாக  கூறப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது-14) எனும் சிறுவன் கடந்த  வெள்ளிக்கிழமை காலை, கள்ளியடி பகுதியில் அரிசி ஆலை ஒன்றுக்கு அரிசி திரிக்க சென்றுள்ளார்.

இதன்போது, அங்கு பணம் திருடப்பட்டதாக அரிசி ஆலையின் உரிமையாளரின் மகன் சிறுவனின் நண்பரிடத்தில் கூறியபோது, அவர் எடுத்திருந்தால் பணத்தை திரும்ப தருவதாக கூறியுள்ளார்.

அதன்பின்னர் அரிசி ஆலையின் உரிமையாளரின் மகன் மற்றும் மகனின் நண்பர்கள் சிலர் இணைந்து, குறித்த சிறுவனின் வீட்டிற்கு சென்று சிறுவனை தாக்கியுள்ளனர். அப்போது சிறுவனின் தாய், தாக்க முயன்றவர்களின் காலில் விழுந்து கதறியுள்ளார். ஆனாலும் சிறுவனை தொடர்ந்து தாக்கி விட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், வீட்டில் மகனை நித்திரையாக்கி விட்டு தாயார் குளித்து விட்டு வந்தவேளையில், தாக்கியவர்கள் மறுபடியும் அவர்களது வீட்டில் இருந்து செல்வதை அவதானித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஓடி  சென்று பார்த்தபோது மகன், தற்கொலை செய்த நிலையில் இருந்ததாக தாயார் குறிப்பிட்டுள்ளார்.

இது தற்கொலை அல்ல எனவும் மகன் தற்கொலை செய்யுமளவுக்கு விபரம் தெரியாதவர் எனவும் தாய் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை இலுப்பைகடவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply