மட்டக்களப்பு – ஏறாவூர் தமிழர் பகுதியில், இளைஞரொருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி நேற்றைய தினம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையிலேயே அமைச்சர் சரத் வீரசேகர குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொலிஸ் அதிகாரிக்கு தாக்குதலை நடத்த எந்த உரிமையும் இல்லை. சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இலஞ்சம் கோருதல், பாலியல் இலஞ்சம் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அத்தோடு பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பான அதிகாரி அல்லது பிற கீழ்நிலை அதிகாரிகள் ஏதேனும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை கண்டறிந்தால் ஏ.எஸ்.பி. மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை, மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞனை போக்குவரத்து பொலிஸார் நிறுத்தியதாகவும், அதனை அவதானிக்காது சென்றதன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.






