உள்ளக முரண்பாடுகளை உடனடியாகக் கைவிட்டு அரசின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் சேவைகள் தனியார் நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் அது அரசின் பயணத்துக்குத் தடையாக அமையும்.
கவனக்குறைவாக மற்றும் பொறுப்புடன் நடந்து கொள்ளாத அதிகாரிகள் தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் , இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அநுராத விஜேக்கோனுக்குப் பணிப்புரை விடுத்தார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வருடாந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதில் காலதாமதம் காணப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
மேலும், 2015 ஆம் ஆண்டு முதல் இலங்கை தேசிய இளைஞர் சேவை தனியார் நிறுவனம் வருடாந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காமை குறித்து கேள்வி எழுப்பினார்.
இந்த அறிக்கைகள் யாவற்றையும் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, அமைச்சரவை தீர்மானத்துக்கு அமைய மாத்தறை நில்வளா இளைஞர் பூங்காவை அமைப்பதற்குத் தீர்மானம் எடுக்கப்பட்டபோதும், இது தொடர்பில் சாத்தியக் கூற்று ஆய்வு மேற்கொள்ளப்படாமை குறித்தும் குழுவின் விசேட கவனம் செலுத்தப்பட்டது.