டொலர் தட்டுபாடு காரணமாக எதிர்வரும் காலங்களில் அரிசி, பால் மா, சீனி மாத்திரமல்ல எரிபொருளையும் இறக்குமதி செய்ய முடியாது, முழு நாடும் ஸ்தம்பித்துப் போய்விடும் நிலைமை ஏற்பட்டுள்ளது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான டொலருக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தவறான அந்நியச் செலாவணி முகாமைத்துவம் காரணமாக டொலர் கையிருப்பு குறைந்து, டொலர் இல்லாமையால் எரிபொருள் கொண்டு வர முடியாமல் போனால் நாடு முழுவதும் ஸ்தம்பித்து போய்விடும்.
கொரோனா தொற்று நோய் காரணமாக வெளிநாட்டு நிதி மூலங்கள் குறைந்ததால், நிலைமை பாரதூரமாக மாறியுள்ளது.
டொலர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக இலங்கை டொலர்களை அச்சிட முடியாது.
இந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் கூடுமான அளவில் டொலர்களை தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்.
நாட்டில் டொலர் கையிருப்பு குறைந்தால், வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கடன் சான்றுதிப் பத்திரங்கள் எதனையும் வெளியிட முடியாத நிலைமை ஏற்படும்.
இந்த நிலைமையால், எதிர்வரும் காலங்களில் அரிசி, பால் மா, சீனி மாத்திரமல்ல எரிபொருளையும் இறக்குமதி செய்ய முடியாது போனால், முழு நாடும் ஸ்தம்பித்துப் போய்விடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.