திருகோணமலை – மூதூர் கடற் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் குடியிருப்பு பகுதிகளையும் மக்கள் இழந்துள்ளனர்.
இதன் காரணமாக, அங்குள்ள மீனவர்களும் பாரிய இடர்களை எதிர்கொள்கின்றனர்.
மேலும், கருவாட்டு வாடி உற்பத்தியாளர்களின் பெறுமதியான தொழில் தளங்கள் கடலுக்கு இரையாவதோடு, பெறுமதியான அரச பொதுக்கட்டடங்களும் நாளாந்தம் சேதமாக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்துடன், மூதூர் கரையோரப் பகுதிகளில் தீவிரமடைந்த கடலரிப்பின் காரணமாக, சுமார் 400 மீட்டர் வரையிலான நிலப்பகுதிக்குள் கடல் உட்புகுந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
எனினும், கடந்த 2003 ஆம் ஆண்டளவில் இதனைத் தடுக்கும் நடவடிக்கை முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டது.
அதன்படி கற்களால் நிரப்பப்பட்டு, கம்பியிலான கூடுகளில் கற்கள் இடப்பட்டு கடற் கரையிலிருந்து கரையினை நோக்கி 70 மீற்றர் வரையான பகுதிகளில் நிலத்தினை தோண்டி கற்கூடுகள் நிலத்தில் உள்ளீர்க்கப்பட்டன. எனினும் அவை வெற்றியளிக்க வில்லை.
தற்போது, இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொள் வேண்டும் என அப்பகுதி மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.