ஓ.எம்.பி அலுவலக செயற்பாடுகளுக்கு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (20) சனிக்கிழமை காலை 11.45 மணியளவில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை நடத்தினார்
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்க்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று 1718 ஆவது நாளாக நாங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
இந்த நேரத்திலே நாங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் சர்வதேசத்துக்கும் அவசரமும் அவசியமானதுமான ஒரு தகவலை தெரிவிக்கவே இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்தோம்.
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், அதாவது ஓ எம் பி அலுவலகத்தால் நாங்கள் ஏற்றுக்கொள்ளாத அலுவலகம் எங்களை பதிவு செய்ததாக கூறி அதாவது காணாமல் போனோர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் தகவல் அடிப்படையில் தங்களுக்கு மிகுதி தகவல்களையும் வழங்குமாறு மக்களுக்கு கடிதங்கள் அனுப்பிவருகின்றனர்
இது தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்திலே கடிதங்கள் வந்து கொண்டிருக்கிறது.
நாங்கள் இந்த ஓ எம் பி அலுவலகத்திலே எந்த ஒரு தகவலையும் பதிவு செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்துவதோடு இது ஒரு பொய்யான தகவலாக வைத்துக்கொண்டு மக்களிடம் இருந்து தகவலை ஏற்று எமக்கான மரணச்சான்றிதழ் இழப்பீடுகளை வழங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் செய்வதற்கு முனைகின்றனர்
இதில் மக்கள் மிகவும் அக்கறையாக இருக்கவேண்டும் , வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களாகிய நீங்கள்.நாங்கள் இந்த முறைப்பாடுகளை செய்யவில்லை என்பது உங்களுக்கு தெளிவாக தெரிகின்ற காரணத்தினால், எங்களுக்கு மரணச்சான்றிதழ்களை வழங்குவதற்காக எமது பதிவுகளை ஏற்றுக்கொண்டதாக அவர்கள் நிக்கிறார்கள்
நாங்கள் இதில் கவனமாக இருப்பதோடு ஓ எம் பி அலுவலகத்திடம் பலதடவைகள் கூறினோம்.
இந்த அலுவலகம் எங்களுக்கு தேவையில்லை நீங்கள் எந்த பதிவுகளையும் செய்ய வேண்டாம் என்று இருப்பினும் அவர்கள் காணாமல் போனவருடைய புகைப்படம் காணாமல் போனவருடைய அடையாள அட்டை காணாமல் போனவருடைய பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட சகல தகவல்களையும் கோருகின்றனர்.
நாங்கள் மடையர்கள் அல்ல இந்த தகவல்கள் அனைத்தையும் தருவதற்கு. நாங்கள் இப்போதும் ஆணித்தரமாக கூறுகிறோம்.
எமக்கு இந்த ஓ எம் பி அலுவலகம் தேவையில்லை ஜனாதிபதி ஏற்கனவே கூறியிருக்கிறார் காணாமல் போனோருக்கு தான் மரணச்சான்றிதழ் வழங்க தயார் என்று.
இதனை சர்வதேசத்திலே கூறியுள்ள இந்த நிலையில் அதை சந்தர்ப்பமாக வைத்து ஓ எம் பி அலுவலகம் பாதிக்கப்பட்ட எம்மிடமிருந்து தகவலை பெற்று எமக்கு மரணச்சான்றிதழ் தருவதற்கு முனைகின்றார்கள்.
இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்
நாங்கள் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது அவர்களை எங்களிடம் கையளியுங்கள் என்று நாங்கள் எங்கள் உயிர்களை தான் கோருகின்றோம் .
எங்கள் உயிர்களை தர விரும்பினால் யாரும் தொடர்பு கொள்ளலாம் அவ்வாறில்லையெனில் யாரும் எங்களது உறவுகளிடம் தொடர்புகொண்டு தகவல்களை பெற வேண்டாம் .
இலங்கையில் எமக்கான தீர்வு கிடைக்காது ஆகவே யாரும் எமது பதிவுகளை பெற முனைய வேண்டாம் – என்றார்.