திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது!

வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர், வாள்களுடன் நேற்று (19.11) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்றிருந்த நிலையில் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய ஐந்து இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், வவுனியா, சிதம்பரபுரம், பகுதியில் கடந்த செப்ரெம்பர் மாதம் 18 பவுண் நகை திருடப்பட்டமை, அதனைத் தொடர்ந்து ஒக்டோபர் மாதம் ஆச்சிபுரம் பகுதியில் 09 பவுண் நகை மற்றும் மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டமை, சிதம்பரபுரம் பகுதியில் பல்சர் ரக மோட்டர் சைக்கிள் ஒன்று திருடப்பட்டமை, தெற்கிலுப்பைக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டமை, இம் மாதம் உக்குளாங்குளம் பகுதியில் ஆலயத்திற்கு சென்ற பெண் ஒருவரிடம் 3 பவுண் சங்கிலி அறுத்துச் செல்லப்பட்டமை மற்றும் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் சங்கிலி அறுக்கப்பட்டமை மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டமை ஆகிய சம்பவங்களுடன் குறித்த ஐவர் தொடர்புபட்டிருந்தமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸர் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள், 2 வாள்கள், தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் பொல்லுகள், 10 பவுண் நகை, என்பன மீட்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *