மாவீரர் தினத்துக்கு தடைகோரி சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு நிராகரிப்பு! யாழ் மாநகர முதல்வர் தெரிவிப்பு (வீடியோ இணைப்பு)

மாவீரர் தினத்துக்கு தடைகோரி சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மாவீரர் தினத்துக்கு தடைகோரி சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் பொலிஸார் இணைந்து சாவகச்சேரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் பெரும்பாலானவர்கள் பிரதிவாதிகள் குறிப்பிடப்பட்டிருந்தனர். குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறித்த விண்ணப்பத்தில் எதிர்வரும் நாட்களில் நடைபெறவிருக்கின்ற மாவீரர் நினைவேந்தல்களை செய்யக் கூடாது என்றும், தடைசெய்யப்பட்ட அமைப்பில் இருந்து உயிரிழந்தவர்களையும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் நினைவுகூற நடவடிக்கை எடுத்துள்ளார்கள். அதிலே விடுதலைப் புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்துவதற்கு உள்ளார்கள் என்றெல்லாம் பொலிஸார் விண்ணம் செய்திருந்தனர்.

மேலும், கொரோனாத் தொற்று காணப்படும் நிலையில் இவ்வாறான நினைவேந்தல்களைத் தடை செய்ய வேண்டும் என்றும், குற்றவியல் நடவடிக்கைச் சட்டக் கோவையின் 106ஆம் பிரிவான பொதுத் தொல்லை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு இன்று நீதிவான் நீதிமன்றத்திலே எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் நானும் சக சட்டத்தரணி சதீஸ்வரன், குகனேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தோம்.

குறித்த விண்ணப்பத்தை நீதிவான் நிராகரித்துள்ளார். ஆகையால், இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மேலும், பெயர் குறிப்பிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இருப்பதாலும் இலங்கையின் சட்டம் இயற்றுகின்ற உயரிய சபைகளில் இருப்பதாலும் இலங்கையின் சட்டம் தொடர்பாக தெளிவாக அறிந்திருப்பார்கள்.

எனவே, அவர்கள் மீது சட்டத்தை மீறுவார்கள் என்ற அடிப்படையில் பொலிசாரின் கோரிக்கையை ஏற்று தடையுத்தரவு பிறப்பிக்க முடியாது.

ஆனால், பெயர் குறிப்பிட்ட நபர்களும் ஏனையவர்களும் இலங்கையின் சட்டங்களை மீறி ஏதாவது நடவடிக்கைகளை முன்னெடுத்தால் கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்த பொலிசாருக்கு அதிகாரம் உள்ளது.

அதனால் பொலிஸாரின் முன்வைத்த கோரிக்கையை ஏற்று குறித்த நபர்களுக்கு எதிராக தடையுத்தரவை வழங்க முடியாது என்று தெரிவித்து குறித்த கோரிக்கையை நீதிமன்றம் தள்ளுபடி செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார் எனத் தெரிவித்தார்.

[embedded content]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *