குருந்தூர் மலைக்கும் நீராவியடிக்கும் எதிராக போராடியவர்கள் தமிழர்கள் அல்ல, மத மாற்ற சட்டம் நடைமுறைக்குவரவேண்டும் என கேட்டுக்கொள்வதாக ருத்ரசேனை என்ற இந்து அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட பிரமுகரும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் கிராம சேவையாளருமான ஒருவர் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியிடம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஞானசார தேரரின் தலைமையில் இன்று இடம்பெற்ற ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணியின் கருத்தறியும் கூட்டத்திலேயே குறித்த செயலணியிடம் இவ்வாறு முறையிட்டுள்ளார்.
மேலும் கருத்தறியும் ஜனாதிபதி செயலணியிடம் கருத்து தெரிவித்த அவர்,
இங்கு நடைபெறும் மதமாற்றங்களை தடை செய்ய வேண்டுமாக இருந்தால் நாட்டில் மதமாற்ற தடை சட்டம் உருவாக்கப்படவேண்டும். குருந்தூர் மலைக்கு எதிராகவும் நீராவியடிக்கு எதிராகவும் போராடியவர்கள் எவரும் திருக்கேதீஸ்வரம் பிரச்சினைக்கு எதிராக போராடவில்லை.
இவர்கள் யாரும் தமிழர்கள் இல்லை. இவர்கள்தான் தமிழ் சிங்கள பிரச்சினையை உண்டாக்குவது இந்த மதமாற்றிகள் அதனை தங்களது அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்துகின்றார்கள்.
முல்லைத்தீவில் தமிழர் மரபுரிமை பேரவை என்ற ஒரு அமைப்பு உள்ளது. இந்த அமைப்பில் உள்ளவர்கள் யாரும் தமிழர்களே இல்லை. தமிழர்கள் அல்லாத அவர்கள் எவ்வாறு தமிழர்களின் மரபுரிமையை பாதுகாக்கும் அமைப்பினர் என கூறலாம்.
வன்னி மாவட்டத்தில் 06 நாடாளுமன்ற உறுப்பினர்கள், இவர்களில் எவரும் தமிழர்கள் இல்லை என ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியிடம் குறித்த இந்துசேனை பிரமுகர் தெரிவித்த போது குறுக்கிட்ட செயலணி உறுப்பினர்களில் ஒருவர்,
அப்படி இல்லை இந்து மதத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தான் யாரும் இல்லை என தெரிவித்தார். அதற்;கு மறுத்து கருத்து தெரிவித்த இந்து அமைப்பின் பிரமுகர் இல்லை நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள் அனைவரும் யூதர்களே என தெரிவித்தார்.
செயலணி கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் ஊடகவியலாளர்கள் எவரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இருந்தபோதிலும் கூட்டத்தின் முடிவு நேரத்தில் ஊடக சந்திப்புக்காக ஊடகவியலாளர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.