பொலித்தீன் பிரேத உறைகள் கொள்வனவிலும் நிதி மோசடி? யாழில் இன்று விசாரணை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத உறை கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் இன்றைய தினம் உள்ளக விசாரணை ஒன்று இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் கொரோனா உச்சம் பெற்ற கடந்த மே மாதம் பிரேதங்களை எடுத்துச் செல்வதற்காக பொலித்தீன் உறைகள் 200 வைத்தியசாலை நிர்வாகத்தினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட பொலித்தீன் உறைகள் ஒவ்வொன்றும் தலா 3,500 ரூபா வீதம் சிட்டையிடப்பட்டுள்ளது.

இதேநேரம் இக் காலப் பகுதியில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சினாலும் 100 பொலித்தீன் உறைகள் கொள்வனவு செய்யப்பட்டதான தகவல் ஓர் உரையாடலின் போது கண்டறியப்பட்டதனால் இரு பொலித்தீன் உறைகளின் தரமும் பரிசோதித்தபோது நிறத்தில் மட்டுமே வேறுபாடு காணப்பட்டபோதும் தரத்தில் எந்தவொரு வேறுபாடும் காணப்படவில்லை.

இதனால் மாகாண சுகாதார அமைச்சு கொள்வனவு செய்த பொலித்தீன் உறையின் விலையை ஆராய்ந்தபோது அவை வெறும் 800 ரூபாவிற்கே கொள்வனவு செய்யப்பட்டது என்ற அதிர்ச்சிர் தகவல் வெளியானது.

இதன் காரணமாக போதனா வைத்தியசாலையின் கொள்வனவு உத்தியோகத்தர் தொடர்பில் முறையிடப்பட்டதோடு 200 பொலீத்தீன் உறையை வழங்கியவரின் ஒப்பந்தம் 200 உறைகளுடன் நிறுத்தப்பட்டு வேறு நிறுவனத்திற்கு தரம் கூடிய பொலித்தீன் உறைகளை கொளவனவு செய்தனர். இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட உறைகள் தலா 1,550 ரூபாவிற்கே கொள்வனவு செய்துள்ளனர்.

இதுதொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் ஒரு தரப்பு எழுத்தில் முறையிட்டுள்ளது. இருந்தபோதும் கொள்வனவு செய்தவர் தொடர்ந்தும் அதே பணியில் இருக்கும் நிலமையில் உள்ளக விசாரணை ஒன்று இன்று இடம்பெறுகின்றது.

இந்த விடயத்தில் மத்திய சுகாதார அமைச்சு அல்லது மத்திய கணக்காய்வு திணைக்களம் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை முன் வைக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *