இலங்கையின் கொரோனாக் கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு சிங்கப்பூர் அறக்கட்டளை உதவி!

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவாக சிங்கப்பூரின் டெமாசெக் அறக்கட்டளையால் நன்கொடையாக வழங்கப்பட்ட 50 பிபெப் இயந்திரங்கள் மற்றும் 8 வென்டிலேட்டர்கள் ஆகியவற்றை பெற்றுக்கொள்வதில் சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் வசதிகளை வழங்கியுள்ளது.

கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் இடம்பெற்ற வைபவமொன்றில் வைத்து இந்த நன்கொடை வழங்கப்பட்டது. வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே இந்த நன்கொடையை உற்பத்தி, விநியோகம் மற்றும் மருந்துகள் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எம்.எஸ்.கே. ரத்நாயக்க ஆகியோரிடம் கையளித்தார்.

தொற்றுநோயின் தோற்றம் முதல், டெமாசெக் அறக்கட்டளை இலங்கைக்கு குறிப்பிடத்தக்க மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஒரு மில்லியன் லிவிங்கார்ட் முகமூடிகளை முன்னணி சுகாதார ஊழியர்களின் பயன்பாட்டிற்காக அவர்கள் முன்னர் நன்கொடையாக வழங்கினர். டெமாசெக் அறக்கட்டளை இலங்கைக்கு கல்வி, சுகாதாரம் மற்றும் பல துறைகளில் தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருகின்றது.

சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் சசிகலா பிரேமவர்தன டெமாசெக் பவுன்டேசன் இன்டர்நெசனலின் பிரதம நிறைவேற்று அதிகாரி பெனடிக்ட் சியோங்கிடம் விடுத்த கோரிக்கையை அடுத்து டெமாசெக் அறக்கட்டளையினால் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இந்த நன்கொடையானது ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸினால் விமானம் மூலம் எடுத்து வரப்பட்டதுடன், விமானப் போக்குவரத்துக்கான நிதி உதவிகள் சிங்கப்பூரில் உள்ள இலங்கை வர்த்தக சங்கத்தால் வழங்கப்பப்பட்டது.

Leave a Reply