
தமிழ் ஊடகப்பரப்பின் பிதாமகரை, உதயனின் தலைமகனை நாம் இழந்து விட்டோம். சத்தியத்தின் வழியில், உண்மையின் குரலாக, மக்களின் மனச்சாட்சியாக உன்னதமான ஊடகப்பணி செய்த கானமயில்நாதன் என்றென்றைக்கும் உதயனின் ஆன்மாவாக வாழ்ந்து கொண்டேயிருப்பார்-இவ்வாறு உதயன்-சஞ்சீவி பிரதம ஆசிரியர் ம.வ.கானமயில்நாதனின் இழப்புக் குறித்த அஞ்சலிப் பதிவில் தெரிவித்துள்ளார் உதயன் குழுமத் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஈ.சரவணபவன்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- எமது பிரதம ஆசிரியர் கானமயில்நாதனின் இழப்பால் ஏற்பட்டுள்ள ஊடக வெற்றிடத்தை அவ்வளவு எளிதில் எவரும் மீள்நிரப்ப முடியாது. கடந்த 36 வருடங்களுக்கும் மேலாக உதயனைக் கருவாக்கி, உருவாக்கி, இந்தளவு தூரம் வியாபிக்க வைத்ததில் கானமயில்நாதனின் பங்கு அளப்பரியது. ஒரு கொள்கையின் கீழ் இவ்வளவு நேர்த்தியோடு ஊடகத்துறையில் பயணிப்பதென்பது அசாத்தியமானது.
அந்த அசாத்தியத்தை உதயனூடாக சாத்தியமாக்கிக் காட்டியவர் கானமயில்நாதன். நான் என்ற அகந்தையோ, கர்வமோ இல்லாமல் சகலரையும் தன் எளிமையாலும், புன்னகையின் வசீகரிப்பாலும் ஒருங்கிணைத்து, தமிழ் மக்களின் அபிமானமாக நாளிதழாக, உரிமையின் குரலாக, தேசியத்தின் சின்னமாக உதயனை மாற்றிக் காட்டியவர் அவர்.
தமிழ் ஊடகப்பரப்பின் பிதாமகரை, உதயனின் தலைமகனை நாம் இழந்து விட்டோம். சத்தியத்தின் வழியில், உண்மையின் குரலாக, மக்களின் மனச்சாட்சியாக உன்னதமான ஊடகப்பணி செய்த கானமயில்நாதன் என்றென்றைக்கும் உதயனின் ஆன்மாவாக வாழ்ந்து கொண்டேயிருப்பார்- என்று தெரிவித்துள்ளார்.