அறுவர் இறக்கும் வரை எங்கு சென்றீர்கள்: இன்று ஆரம்பிக்கப்பட்ட குறிஞ்சாக்கேணி பேருந்து சேவைக்கு மக்கள் கடும் எதிர்ப்பு!

கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாலம் விபத்துக்குள்ளானதில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததையடுத்து, இன்று காலை குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டமைக்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காக்காமுனையில் இருந்து நடுத்தீவு, குறிஞ்சாக்கேணி ஊடாக கிண்ணியாவுக்கு பேருந்து சேவை இன்று காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டதாக கிண்ணியா பேருந்து சாலை பொறுப்பதிகாரி கலீலுல்லாஹ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

காக்காமுனையிலிருந்து குறிஞ்சாக்கேணிக்கு இன்று காலை பயணித்த பேருந்தை குறிஞ்சாக்கேணியில் வைத்து பிரதேசவாசிகள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் குறித்த பேருந்து, குறிஞ்சாக்கேணியில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மிதப்பு பாலம் விபத்துக்குள்ளாகி ஆறு பேர் மரணித்த பின்னர், இந்தப் பேருந்து சேவை முன்னெடுக்கப்படுகின்றமைக்கு பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் இந்த பேருந்து சேவை ஏன் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், பேருந்து சேவையை முன்னெடுக்கும் அதிகாரிகள் தங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும், சம்பவ இடத்துக்கு கிண்ணியா நகரசபை தலைவர் மற்றும் அதிகாரிகள் வருகை தரவேண்டும் எனவும் பிரதேசவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு அறியப்படுத்தியுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிஞ்சாக்கேணி – கிண்ணியாவிற்கு நாளை முதல் பஸ் சேவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *