மட்டக்களப்பு, முகத்துவாரம் கடல் பகுதியில் படகில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் படகு கவிழ்ந்ததில் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
படகு செட்டிபாளையம் கடல் கரையில் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மட்டு. திரைய்மடு, சுவீஸ் கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய சுந்தரராஜா சுரேஸ் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
குறித்த மீனவர் சம்பவதினமான நேற்று மாலை 6 மணியளவில் இயந்திர படகில் தனியாக முகத்துவாரம் கடலில் மீன்பிடிப்பதற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, கடலில் இருந்து வலையை இழுக்கும் போது படகு கவிழ்ததையடுத்து அவர் கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கவிழ்ந்த படகு செட்டிப்பாளையம் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளதாகவும், காணாமல் போனவரை கடற்படையினர் தேடிவருகின்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.