கிண்ணியா குறிஞ்சாக்கேணியில் நேற்று இடம்பெற்ற படகு விபத்தின் போது கிண்ணியா தளவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஆறு பேர் இன்று மதியம் சிகிச்சையை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி டொக்டர் ஜிப்ரி தெரிவித்தார்.
இதில் இரு சிறுவர்களும் நான்கு ஆண்களும் அடங்குவர்.
படகு விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் 27 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
ஒருவர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கும், மற்றுமொருவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கும் அனுப்பப்பட்டிருந்தனர் தற்போது ஏனையோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.
மேலும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இன்று, கிண்ணியா தளவைத்தியசாலைக்கு விஜயம் செய்து படகு விபத்தில் அனுமதிக்கப்பட்டவர்களை நலன் விசாரித்து பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இதன்போது, இந்த படகு விபத்து சம்பவம் பெரும் கவலையளிக்கிறது. குறிஞ்சாக்கேணி பால விடயத்துடன் சம்மந்தப்பட்ட இதன் பின்புலத்தில் உள்ளவர்களை தராதரம் பாராது தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

