மாவீரர்தின நினைவேந்தலுக்கு சிங்கள மக்கள் எதிர்ப்பில்லை!

“மாவீரர்களுக்கான நினைவேந்தலை நடத்துவதற்கு சிங்கள மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இதற்கு எதிராக அவர்கள் போராட்டங்களை நடத்தியதும் கிடையாது. எனவே, இலங்கை அமைதிப்பூங்காவாக மாறவேண்டுமெனில் மாவீரர் நினைவேந்தலுக்கு எவ்வித இடையூறும் இல்லை என்பதை பகிரங்கமாக அறிவியுங்கள்.”
இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஆளுங்கட்சியினரிடம் கோரிக்கை விடுத்தார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 3 ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த நாட்டில் தமிழர்கள் வாழ்ந்த – வாழுகின்ற பகுதிகளில் போர்க்காலத்தில் தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை தமிழ் மக்கள் நினைவுகூரிவருகின்றனர். இந்தநிலையில், மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு முன்னால் தற்போது பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கார்த்திகை மாதத்தில் படையினரைக் குவித்து துயிலும் இல்லங்களை மறைப்பதன்மூலம், தமிழ் மக்கள் தமது வீரப்புதல்வர்களை மறக்கக்கூடிய சூழல் வரும் என்றா கருதுகிறீர்கள்?

2016, 2017, 2018 ஆம் ஆண்டுகளில் தமிழ் மக்கள் மிகவும் அமைதியானமுறையில் மாவீரர் தினத்தை அனுஷ்டித்தனர். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவிக்கு வந்த பின்னர் 2019 இலும் நிகழ்வு இடம்பெற்றது. மக்கள் எவ்வித அசம்பாவிதங்களிலும் ஈடுபடவில்லை.

தெற்கில் விழாக்கள் நடத்தப்படுகின்றன, விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன, இவற்றுக்கெல்லாம் கொரோனா கட்டுப்பாடுகள் இல்லை. மாறாக கொரோனாவை காரணம்காட்டி துயிலும் இல்லங்களுக்கு முன்னால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வடக்கு, கிழக்கு பகுதிகள் போர்க்கால நிலைவரம்போல் காட்சியளிக்கின்றன.
உங்களுக்கு புரிதல், புரிந்துணர்வு, இணக்கம், இணக்க அரசியல் வேண்டும் என்றால் முதலில் மக்கள் மனங்களை வெல்லுங்கள். வணக்கமுறைகளைத் தடுப்பதன்மூலம் எதை சாதிக்கப்போகின்றீர்கள்? மாவீரர் தின நிகழ்வை சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை. அதற்கு எதிராக ஒரு பேரணியைக்கூட நடத்தியதில்லை. ஆனால் அரசியல் தேவைக்காக ஜனாதிபதியில் இருந்து அமைச்சர்மார்வரை இந்த விடயத்தை வைத்து அரசியல் நடத்துகின்றனர்.
உங்களது குழந்தை, சிங்கள வீரன் புதைக்கப்பட்ட இடத்தில் சப்பாத்து காலுடன் நடந்தால், அதில் புட்போட் விளையாடினால் உங்கள் மனம் எப்படி இருக்கும்? எனவே, நினைவேந்தல் நடத்தும் உரிமையை வழங்குங்கள். அப்போதுதான் அமைதி பிறக்கும். நாட்டின் பொருளாதாரம் மேம்படும். இலங்கை அமைதிப்பூங்காவாக மாற வேண்டுமெனில், இறந்தவர்களை, மாவீரர்களை நினைவுகூருவதற்கு எவ்வித இடையூறும் இல்லை என்பதை பகிரங்கமாக அறிவிக்கவும்.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *