வலுவடையம் தாழமுக்கம்; வடக்கு உள்ளிட்ட மாகாணங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் நிலை காணப்படுவதால் வடக்கு உள்ளிட்ட மாகாணங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை நிலவரம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அவதான அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

இலங்கைக்கு தென்கிழக்காக தற்போது நிலை கொண்டுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த சில மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடக்கு அல்லது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 35 – 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார், புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை : காங்கேசந்துறையிலிருந்து மன்னார், புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்,

அனுராதபுரம், மட்டக்களப்பு, கொழும்பு, காலி, இரத்தினபுரி, திருகோணமலை – அவ்வப்போது மழை பெய்யும், யாழ்ப்பாணம், கண்டி, நுவரெலியா, மன்னார் – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *