குறிஞ்சாகேணி படகு விபத்தில் இறந்தவர்களுக்காக கிண்ணியாவில் இன்று துக்கதினம் அனுஸ்டிப்பு

கிண்ணியா குறிஞ்சாகேணி ஆற்றில் கடந்த 23 ஆம் திகதி ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு அனுதாபங்களை தெரிவிக்கும் முகமாகவும், குறிஞ்சாகேணி மக்களின் பாதுகாப்புக்கு அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்தும் கிண்ணியா பிரதேச சபை மற்றும் கிண்ணியா நகரசபை மக்களால் இன்று துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது, கிண்ணியாவில் உள்ள 66 பாடசாலைகளும் மாணவர்கள், ஆசிரியர்கள் வரவு இன்றி, மூடப்பட்டிருந்தன. அரச மற்றும் தனியார் திணைக்களங்களும் ஊழியர்களின் வரவில்லையால் இயங்கவில்லை. பயணிகள் போக்குவரத்துச் சேவைகள் எதுவும் இடம்பெறவில்லை.

வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. வர்த்தக நிலையங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டிருந்தன. வைத்தியசாலைகளில் வழமைபோன்று சேவைகள் நடைபெற்றன. மக்கள் வீடுகளிலும் வீதிகளிலும் வெள்ளைக் கொடிகளை ஏற்றி தங்களுடைய துக்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

அதேபோன்று மரணித்தவர்களின் ஈடேற்றத்திற்காகவேண்டி, இன்று மக்கள் நோன்பு நோற்று வீடுகளில் இருந்தவாறு பிரார்த்தனைகளில் ஈடுபட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

இந்த துக்க தினம் அனுஸ்டிப்புகாக கிண்ணியா பள்ளிவாசல்கள் சம்மேளனம், உலமா சபை, மஜிலீஸ் சூரா மற்றும் சிவில் அமைப்புக்களின் ஒன்றியம் ஆகியன துண்டுப் பிரசுரங்கள் மூலம் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *