15 நாட்களில் 15 ஆயிரத்தை அண்மித்த சுற்றுலாப் பயணிகளின் வருகை!

நாட்டிற்கு இம்மாதம் முதல் 15 நாட்களில் வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 833ஆக பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜனவரி 1 முதல் செப்டம்பர் 15ஆம் திகதி வரையிலான காலக்கட்டத்தில் 5 இலட்சத்து 11 ஆயிரத்து 263 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, மாதத்திற்கான சராசரி வருகை 988 ஆக பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையால் பகிரப்பட்ட தினசரி வருகையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

செப்டம்பர் மாதத்திற்கான வாராந்திர வருகைகள் ஓகஸ்ட் மாதத்தை விடக் குறைவாக உள்ளதாகவும் செப்டம்பர் முதல் இரண்டு வாரங்களில் சராசரியாக 7 ஆயிரத்து 416 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதோடு, ஓகஸ்ட் மாதத்தில் சராசரியாக வாரத்திற்கு 9 ஆயிரத்து 440 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

செப்டெம்பர் 1 முதல் 15 வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கான முதல் மூன்று சுற்றுலாப் போக்குவரத்தை உருவாக்கும் சந்தையாக இந்தியா (3,067), ஐக்கிய இராச்சியம் (1,527) மற்றும் அவுஸ்ரேலியா (1,137) ஆகிய நாடுகள் உள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கைக்கு எதிராக வழங்கப்பட்ட பயண ஆலோசனைகளை சுற்றுலா மூல சந்தைகள் தளர்த்தியுள்ளதால் எதிர்வரும் குளிர்காலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிறசெய்திகள்

Leave a Reply