
யாழ்.நீதிமன்று, வழங்கிய மாவீரர்நாள் தடையுத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம் நிராகரித்தார்.
மாவீரர்நாள் நிகழ்வுக்குத் தடைவிதிக்க கோரி, கடந்த 19ஆம் திகதி, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கத்தின் முன் யாழ்ப்பாணம் பொலிஸார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதன்படி, மாவீரர்தின நிகழ்வை நடத்துவதற்கு பலருக்கு பதில்நீதிவான் தடைவிதித்திருந்தார். அது பற்றிய கட்டளைகள் பிரதிவாதிகளுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இதில் சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தாவின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, தன் மீதான தடையை நீக்கக்கோரி சிறிகாந்தா மனுவொன்றை நேற்றுத் தாக்கல் செய்திருந்தார்.
மனு பரிசீலனையின்போது, சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா சுமார் 80 நிமிடங்கள் சமர்ப்பணம் செய்தார். பிரதிவாதிகள் தரப்பில் முன்னிலையான 3 சட்டத்தரணிகளும் கிட்டத்தட்ட 2 மணித்தியாலங்கள் சமர்ப்பணம் செய்தனர்.
பொலிஸார் தரப்பில் சுமார் 30 நிமிடங்கள் பதில் வழங்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பதில் நீதிவான் மிக சுருக்கமாக, “நான் வழங்கியிருப்பது தற்காலிக கட்டளையல்ல, நிரந்தர கட்டளை. நீங்கள் விரும்பினால் மேல்நீதிமன்றில் விண்ணப்பிக்கலாம்” என்று தீர்ப்பளித்தார்.
யாழ். மாவட்டத்தில் ஏனைய நீதிமன்றங்களான சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன், பருத்தித்துறை நீதிபதி கிரிஷாந்தன், மல்லாகம் நீதிபதி ஏ.ஆனந்தராஜா, ஊர்காவற்துறை நீதிபதி கஜநிதிபாலன் ஆகியோர் மாவீரர்நாள் தடைகோரிய மனுக்களை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.