
24.09.1987
பெற்றோர், பிள்ளைகள், சகோதரர்-, உற்றார், உறவினர், நண்பர்கள் இவர்களில் யாராவது எம் கண்முன்னால் இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுகிறது. ஆனால், இவர்களில் ஒருவர் அணுஅணுவாக இறந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது… துயரத்தின் எல்லைக்கே நாம் போய்விடுகின்றோம். உலகமே சில வினாடிக்குள் வெறுத்துப் போய்விடும். கண்களில் அழுவதற்குக் கண்ணீர்கூட எஞ்சியிருக்காது.
இவர்களில் ஒருவர் ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல் 10 நாள்களாக எம் கண்முன்னால் அணு அணுவாகச் சாவின் விளிம்பில் நின்று தத்தளிப்பதைப் பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் போது ஏற்படும் மனவேதனை இருக்கிறதே…. அப்பப்பா!… அதை வாய்விட்டுச் சொல்ல முடியாது. அத்துனை கொடுமை அனுபவித்தவர்களுக்கு மட்டும் புரியும் அது. அதை நான் என் வாழ் நாளில் முதன்முறையாக அனுபவிக்கிறேன்.
இதையெல்லாம் என் கண்களால் பார்க்க வேண்டும் என்று முன்பே தெரிருந்திருக்குமானால் நான் திலீபன் இருந்த பக்கமே தலைவைத்துப் படுத்திருக்கமாட்டேன். நான் முற்று முழுதாக நினைத்திருந்ததெல்லாம் இதுதான். இந்தியா ஒரு பழம்பெருமைமிக்க ஜனநாயக நாடு. காந்தி பிறந்த பொன்னான பூமி. அகிம்சையைப் பற்றியும் – உண்ணாவிரதத்தைப் பற்றியும் உலகில் பெருமைப்படக்கூடிய அளவுக்கு காந்தியடி கள் மூலம் புகழ்பெற்ற நாடு. அப்படிப்பட்ட ஒரு நாட்டிடம் நீதி கேட்டு அகிம்சை வழியில் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்த திலீபன். உண்மையிலேயே பாக்கியசாலிதான். ஏனெனில், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த நாடு நிச்சயமாக திலீபனுக்கும் ஒரு நல்ல வழியைக் காட்டத்தான் செய்யும்…
தமிழ் மக்களின் அபிலாசைகளை ஓரளவாவது இந்திய அரசு நிறைவேற்றத்தான் போகிறது…… என்ற எண்ணத்தில் தான் கண்களை மூடிக்கொண்டு… இந்தத் தியாக வேள்வியில் என்னால் முடிந்த பங்கை செலுத்துவதற்குத் தயாரானேன். நான் நினைத்ததெல்லாம்… இவ்வளவு விரைவில் மாயமான் ஆகிவிடும் என்று நான் கனவு கூட கண்டிருக்கவில்லை…. எத்தனை பெரிய ஏமாற்றம் எத்தனை பெரிய தவிப்பு?
இன்றைய நிலையில் திலீபன் இருந்த நிலையை பார்த்தபோது நம்பிக்கையே அற்றுவிட்டது. இனி ஒரு நல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் பிறகு திலீபனை மருத்துவமனையில் சேர்த்தாலும் காப்பாற்ற முடியுமா? என்பது என்னைப் பொறுத்த அளவில் கேள்விக்குறிதான். திலீபனைக் கொல்வதற்கு அவர்கள் திடமனம் பூண்டுவிட்டனர் என்பது புரிந்துவிட்டது. அதோ வானத்தில் ஒரு வயோதிக உருவம் முகில்களைக் கிழித்துக்கொண்டு என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறது.
அவ்வுருவத்தின் தலையிலே மயிரிலே… கண்களில் வெள்ளைக் கண்ணாடி…. அந்தக் கண்களில் அருவியாக வழிந்து கொண்டிருக்கிறது. அது என்ன? இரத்தமா? அந்த மனிதன் இரத்தக் கண்ணீர் சொரிகிறாரே… ஏன்? ஏன்? அடுத்து வேறு ஒரு உருவம்! அதன் தலையிலும் மயிரைக் காணவில்லை …. வானத்தின் நடுவிலே வெள்ளரசு மரத்தின் அடியிலே அமர்ந்திருக்கும் அந்த உருவம் எம்மை, இல்லை திலீபனையே பார்த்துக்கொண்டிருக்கிறது.
பௌர்ணமி நிலவில் அந்தக் கருணை முகத்திலே…… கருணையைத் தேடுகின்றேன்… ஆனால், காணமுடியவில்லை … ஏன் … ஏன்…? இந்திய மண்ணில் என்றோ தோன்றி மறைந்துவிட்ட அந்த இரு சோதிகளும் அல்ல, உருவங்களும் வெகுநேரம் திலீபனைப்பார்க்க முடியாமல் வெட்கிக் தலைகுனிந்தவாறு சிறிதுசிறிதாக என் கண்களை விட்டு மறைந்துகொண்டிருக்கின்றன.
நேற்று சிறிதளவாவது அசைந்து கொண்டிருந்த திலீபனின் கை, கால்கள் இன்று அசைவற்று சோர்ந்து விட்டன. உள்மூச்சு மட்டும் பலமாக இழுத்துக்கொண்டிருக்கின்றது. கண்கள் உச்சியிலே குத்திவிட்டு நிற்கின்றன. உடலின் நிறம் சிறிது நீலமாக மாறத் தொடங்கிவிட்டது.
நாடித்துடிப்பைப் பரிசோதிக்கிறேன். 52 இரத்த அழுத்தம்- 80/50. சராசரி மனிதனின் அளவுகளைவிட எல்லாமே மிகவும் குறைந்துள்ளன. இனித் திலீபனுக்கு எந்த நிமிடமும் எதுவும் நடக்கலாம். ஐயோ… அதை நினைத்துப்பார்க்கவே நெஞ்சம் வெடித்துவிடும் போலிருக்கின்றது.
அன்று திலீபன் கிட்டு அண்ணாவைப் பார்க்கவேண்டும் என்றாரே? இதற்காகத்தானா? இந்திய அரசு தன் கோரிக்கைகளை நிறைவேற்றாது என்பதை அவர் உள்ளூர அறிந்தவர் போல் அன்று உண்ணாவிரத மேடையிலிருந்து எவ்வளவு தீர்க்கதரிசியாக இதைக்கூறினார். “நான் இறப்பது நிச்சயம்… அப்படி இறந்ததும் வானத்திலிருந்து என் தோழர்களுடன் சேர்ந்து தமிழீழம் மலர்வதைப் பார்ப்பேன்…’’ இந்த வார்த்தைகளை இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்….




