பாவற்குளத்தின்4 வான்கதவுகள் திறப்பு- மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றமையினால், அதன் 4வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

ஆகவே பாவற்குளத்திற்கு அருகில் வசிக்கும் மக்களை தொடர்ந்தும் அவதானமாக இருக்குமாறு மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் பிராந்திய நீர்பாசன பொறியிலாளர் கே.இமாசலன் வலியுறுத்தியுள்ளார்.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பல குளங்களின் நீர் மட்டம் அதிகரித்து வான் பாய்ந்து வருவதுடன், பாவற்குளத்தின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது.

பாவற்குளத்தின் நீர்மட்டமானது அதன் கொள்ளளவான 19.4 அடியை அடைந்துள்ளதால், அதன் இரு வான் கதவுகள் ஒரு அடிக்கும் இரு வான் கதவுகள் 9 அங்குலத்திற்கும் ஆக நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அத்துடன் தொடர்ந்து மழை பெய்து வருகின்றமையினால் மேலும் வான் கதவுகள் ஊடாக நீர்பாயும் வீதத்தை அதிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் பாவற்குளத்தின் நீர் வழிந்தோடும் பகுதிகளிலுள்ள கந்தசாமி நகர், கிறிஸ்தவகுளம், பாவற்குளம் படிவம் 5,6,4,2,1 பீடியாபாமின் வேப்பங்குளம் ஆகிய பகுதிகளிலுள்ள மக்கள் மிகவும் அவதானமாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என நீர்பாசன பொறியிலாளர் கே.இமாசலன் வலியுறுத்தியுள்ளார்

இதேவேளை முகத்தான்குளத்தின் நீர்மட்டம் 11 அடி 9 அங்குலமாகவும் மருதமடுக்குளம் 12 அடி 8 அங்குலமாகவும் இராசேந்திரங்குளம் 12.6 அங்குலமாகவும் உயர்வடைந்துள்ள நிலையில், இக்குளங்களும் வான் பாய்ந்து வருகின்றன. இதனால் அதன் கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்களும் முன் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், ஈரப்பெரியகுளத்தின் நீர்மட்டமும் 13 அடியாக உயர்வடைந்துள்ளது. தொடர்ந்தும் மழை பெய்தால் அக்குளமும் வான் பாயும் நிலை ஏற்படும் என கே.இமாசலன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *