நினைவுகூரல்கள மேற்கொள்ளமுடியும்!

தடைசெய்யப்பட்ட இயக்கமொன்றின் நிகழ்வை நினைவுபடுத்தக்கூடியதாக நினைவுகூரல்களை மேற்கொள்ளமுடியாது, எனினும், இறந்தவர்களுக்கு பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ளமுடியும். – என்று, முல்லைத்தீவு நீதிமன்று திருத்தி அமைத்துக் கட்டளை பிறப்பித்தது.
முல்லைத்தீவு நீதிமன்றம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு கடந்த 17, 23ஆகிய திகதிகளில் வழங்கிய தடைக்கட்டளையையே நேற்று திருத்தியமைத்து கட்டளை பிறப்பித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு கடந்த 17ஆம் திகதி மற்றும் 23 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட எழுபத்திரெண்டு பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, முள்ளியவளை ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி ஐயன்குளம், புதுக்குடியிருப்பு ஆகிய ஏழு பொலிஸ் நிலையங்களால் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தமைக்கு அமைவாக குறித்த எழுபத்திரெண்டு பேருக்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், தடைக்கட்டளைகளில் பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தவர்களில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா, வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன், கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன், புதுக்குடியிருப்புப் பிரதேசசபை உறுப்பினர் சி.குகநேசன், சமூகசெயற்பாட்டாளர் த.யோகேஸ்வரன் ஆகியோர், மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான தடை உத்தரவை நீக்கக்கோரி நீதிமன்றில் நேற்று நகர்த்தல்பத்திரம் செய்திருந்தனர்.
அதை ஆராய்ந்த நீதிபதி ரி.சரவணராஜா, ஏற்கனவே வழங்கிய மாவீரர் நாள் நினைவேந்தலை மேற்கொள்வதற்கு எதிரான கட்டளையை திருத்தி அமைத்து கட்டளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *