அண்மையில் கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப் பாதை கவிழ்ந்ததில் சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததையடுத்து குறிஞ்சாக்கேணி பாலத்தில் நேற்று முதல் பாதுகாப்பான பயணிகள் போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்கு இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ளது.
திருகோணமலை – கிண்ணியாவிலுள்ள குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் வரை அப்பகுதி மக்கள் இப் போக்குவரத்து முறையைப் பயன்படுத்த முடியும் என கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் பணிப்புரைக்கு அமைய குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாண பணியினால் பிரதேசவாசிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் நாளாந்தம் நீர் நிலையைக் கடக்க எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற்கொண்டு மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரே நேரத்தில் 25 பயணிகளை பாதுகாப்பாக ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட லகூன் கிராஃப்ட் இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
இப்படகுச் சேவையானது தினமும் காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரையிலும், மதியம் 12.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும், பயணிகள் பாதுகாப்பாக கப்பலில் ஏறுவதற்காக கடற்படை தற்காலிக இறங்கு துறையையும் அமைத்துள்ளது.
[embedded content]