தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பிறந்த நாள் வாழ்த்துக்களை இன்றைய தினம் நாடாளுமன்றில் வைத்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் தனது வாழ்த்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
போர் காலத்தின்போது கிபிர் விமானங்கள் வந்தால், தமிழ் மக்கள் எந்தளவு பயந்தார்களோ, அதேபோன்று இன்று மஹாவலி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போது தமிழ் மக்கள் அச்சப்படுகிறார்கள்.
எனவே மஹாவலி திட்டத்தின் ஊடாக வடமாகாணத்தின் குடிப்பரம்பலை மாற்றும் முயற்சிகள் நிறுத்தப்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து அத்தியாவிய பொருட்களும் இரசாயன உற்பத்தி பொருட்களாகவே இருப்பதாக நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் மேற்கொள்கின்ற அனைத்து நடவடிக்கைகளும் தனிப்பட்டவர்களுக்கு இலாபம் தரும் திட்டங்களாகவே அமைந்துள்ளது.
அரசாங்கத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் அங்கம் வகிக்கின்றபோதும் அவர்களால் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்க்கமுடியாது என்றும் குறிப்பிட்டார்.
சங்ககாலத்து மன்னர்களை பற்றி நாம் படித்திருக்கின்றோம். ஆனால் இந்த காலத்தில் எங்கள்முன் வாழ்ந்துகாட்டிய ஒரு மிகப்பெரிய தலைவர் தமிழின தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்- என்றார்.