வெடித்துச்சிதறும் சிலிண்டர்கள்: உள்ளடக்க மாற்றமே காரணம்!

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறுகின்றன. அவற்றின் உள்ளடக்கங்களின் அளவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றமே அவை வெடிப்பதற்கான பிரதான காரணமாகும். இது தொடர்பில் துறைசார் நிபுணர்களைக் கொண்டு விசேட பரிசோதனைகளை முன்னெடுத்து, அதன் அறிக்கையை நாட்டுக்கு வெளிப்படுத்துங்கள்.

இவ்வாறு, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது ஐக்கிய தேசிய கட்சி.
அத்தோடு மக்களின் உயிரை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும் சமையல் எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார வெளியிட்டுள்ள விசேட அறிப்பில்,
நாட்டு மக்களுக்கு தேவையான சமையல் எரிவாயுவை வழங்குவதில் அரசாங்கம் ஆரம்பத்திலேயே தோல்வியடைந்தது. எனினும், தற்போது அரசாங்கமானது வெடிக்கக் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர்களை அல்லது எரிவாயு வெடிகுண்டுகளை மக்களுக்கு விநியோகித்துக் கொண்டிருக்கிறது.

இதுவரையில் கொழும்பு, கண்டி, வெலிகம, கொட்டாவ மற்றும் ஹோகந்த என பல்வேறு பகுதிகளிலும் சமையல் எரிவாயு கசிவால் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தற்போது சமையல் எரிவாயு நுகர்வோரின் உயிர் மிகுந்த அபாயத்தில் உள்ளது. நுகர்வோரான பொதுமக்களின் உயிர் இவ்வாறான வெடிப்பு சம்பவங்களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதற்கு இடமளிக்கமுடியாது.
அது மாத்திரமின்றி குறித்த பரிசோதனை அறிக்கைகளை எவ்வித ஒழிவு மறைவும் இன்றி நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *