வவுனியாவில் அடைமழை; 115 பேர் இடம்பெயர்வு!

வவுனியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அடைமழை காரணமாக 31 குடும்பங்களைச் சேர்ந்த 115 பேர் பாதிப்படைந்துள்ளனர் என்று, இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

வவுனியாவில் 03 குடும்பங்களைச் சேர்ந்த 11 அங்கத்தவர்களும், வவுனியா வடக்கில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 66 அங்கத்தவர்களும், தெற்கில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 03 அங்கத்தவர்களும், வெங்கலசெட்டிகுளத்தில் 08 குடும்பங்களைச் சேர்ந்த 35 அங்கத்தவர்களுமாக நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் 31 குடும்பங்களைச் சேர்ந்த 115 பேர் பாதிப்படைந்துள்ளனர். 3 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, வவுனியாவில் உள்ள அநேக குளங்கள் வான் பாய்கின்றமையால் திருநாவற்குளம் பகுதி, கூமாங்குளத்தின் சில பகுதிகள், மதுராநகர், நெடுங்கேணி போன்ற பிரதேசங்கள் பாதிப்புக்குக்குள்ளாகியுள்ளன.
மேலும் பாவற்குளத்தின் வான்கதவுகளின் ஊடாக செல்லும் நீரின் அளவை அதிகரிக்க கதவுகளைத் திறக்கும் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, வவுனியா நெளுக்குளம், செட்டிகுளம் பிரதான வீதியானது இரவு(நேற்று) 9 மணி தொடக்கம் (இன்று) காலை 5 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்று இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகளில் ஒரு கதவு நேற்றுமுன்தினம் இரவு 9 மணிக்கு திறக்கப்பட்டன. ஏனைய 3 கதவுகளும் நேற்று இரவு 9 மணிக்கு திறக்கப்பட்டன.
மேலும் பாவற்குளம் மற்றும் பேராறு நீர்த்தேக்கத்துக்கு அருகிலுள்ள மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *