முறையாகத் திட்டமிடப்படாத அபிவிருத்திகளை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்க வேண்டுமென கிண்ணியா சூரா சபை வலியுறுத்தியுள்ளது.
கிண்ணியா- குறிஞ்சாக்கேணியில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற படகுப் பாதை விபத்தில் 6 பேர் மரணமடைந்தும் பலர் காயமடைந்தும் இருந்தனர்.
இந்த விபத்து என்பது முறையாகத் திட்டமிடப்படாத ஓர் அபிவிருத்தித் திட்டத்தின் தொடர்ச்சியில் ஏற்பட்ட ஒன்றாகும் என கிண்ணியா சூரா சபையின் தலைவர் ஏ.ஆர்.எம்.பரீத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (26) ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில்,
இந்த விபத்துத் தொடர்பான காரணங்களை முழுமையாக ஆராய வேண்டும்.
தற்காலிகப் பாலம் அகற்றப்பட்ட போதும் இந்தப் பாலத்துக்கான திட்ட வரைவுகள் தயாரிக்கும் போதும் மாற்றுப் பாதைகள் குறித்து சிந்தித்து முடிவு எட்டப்பட்டனவா?
இவ்விடயம் தொடர்பில் பல மகஜர்கள் கையளிக்கப்பட்டும், அலட்சியமாக இருந்தவர்கள் யார்? விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முழுமையான நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.
இதற்குக் காரணமானவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். எமது மக்களுக்கு நீதி வேண்டும்.
எனவே, இது தொடர்பாக உடனடியாக விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டும்.
இந்தக் கோரிக்கை ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது- என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.