கற்பூர உற்பத்தியில் ஈடுபடும் சிறுகைத்தொழில் முயற்சியாளர் ஒருவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் முயற்சியால் இயந்திர கொள்வனவுக்கான நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டது.
கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இருபாலை கிழக்கு மண்டான்குள வீதியை சேர்ந்த தி.உசாயினி என்ற பெண் தொழில் முயற்சியாளருக்கு கற்பூர உற்பத்திக்கு பிரதேச செயலகத்தால் தொழில் முயற்சி உதவி வழங்கப்பட்டது.
எனினும் இயந்திரம் ஒன்று கொள்வனவு செய்ய வேண்டிய தேவை இருப்பது தொடர்பாக தொழில் முயற்சியாளரால் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் முயற்சியால் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் லண்டன் கிளை உறுப்பினர்களான தயாமயூரன், முகுந்தன் ஆகியோரின் அணுசரணையில் நிதியுதவி வழங்கப்பட்டது.
கோப்பாய் பிரதேச செயலகத்தில் இன்று காலை உதவி பிரதேச செயலர் ச.ராதிகா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பா.கஜதீபன், வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சி.அகீபன் ஆகியோர் தொழில் முயற்சியாளரிடம் நிதி உதவியை வழங்கி வைத்தனர்.
இதன்போது, விதாதாவள நிலைய வெளிக்கள இணைப்பாளர் ஜெயானந்தன், அபிவிருத்தி உதவியாளர் சத்தியசீலன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.