குறிஞ்சாக்கேணி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், குறிஞ்சாக்கேணி பாதை விபத்தில் தமது இன்னுயிர்களை நீத்த பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேரின் ஆத்மா அமைதி பெற முதற்கண் எனது பிரார்த்தனையையும், அவர்களின் பெற்றோர் உறவினர்களுக்கான எனது மனதார்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
முழுக்க முழுக்க பாதுகாப்பற்ற ஒரு பாதையை தயார்செய்து அதன் பயணப் பாதுகாப்பிற்கு எந்தவித உத்தரவாதமும் அற்ற நிலையில் அது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
குறிஞ்சாக்கேணியில் வாழ்கின்ற மக்கள் திருகோணமலை, கிண்ணியா போன்ற இடங்களுக்குச் செல்வதற்கு இந்த ஒரு பாதை மட்டுமே காணப்பட்டதால் மக்களும், மாணவர்களும் எப்படியும் இதில் பயணம் செய்ய வேண்டியிருந்தது.
இவ் விடயத்தைக் கவனிக்க வேண்டிய பிரதேசசபை, நகரசபை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, துறைசார்ந்த அமைச்சுக்கான அமைச்சர், பிரதம மந்திரி அனைவரும் கூட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பயன்படுத்தப்பட்ட பாதை பயண ஒழுங்குக்கு ஏற்றதல்ல என அனுமதி மறுப்புத் தெரிவித்த வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு மாற்று ஒழுங்கு ஒன்றை ஏற்படுத்த முடியாமல் போனமை வேதனைக்குரியது என்றார்.