ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் விஜயம் – தற்காலிக அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி நாட்டில் இல்லாத காலப்பகுதியில், அவருக்கு கீழ் உள்ள அமைச்சுக்களின் இராஜாங்க அமைச்சர்களுக்கு பதில் அமைச்சர்கள் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

பதில் நிதி அமைச்சராக ஷெஹான் சேமசிங்க நியமனம்

இதன்படி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும், நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பொருளாதார, ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைக்கான பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்ப பதில் அமைச்சராக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், இராஜாங்க அமைச்சர் அனுபா பெஸ்குவாலை பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் செல்லும் ஜனாதிபதி

இதேவேளை, ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

இன்று (26) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அவர் தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

ஜப்பானின் முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின்னர் ஜனாதிபதி பிலிப்பைன்ஸுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

எவ்வாறாயினும், பிலிப்பைன்ஸ் செல்வதற்கு முன்னதாக ஜப்பானிய பிரதமர் மற்றும் பல அமைச்சர்களுடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்த ஜனாதிபதி ஏற்பாடு செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *