
சமூக ஊடகங்கள் குறித்து விழிப்புணர்வு பயிற்சி பட்டறை.

செல்வி வினாயகமூர்த்தி
இலங்கையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பொய்யான செய்திகள் மற்றும் வெறுக்கதக்க பேச்சுக்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பயிற்சி பட்டறை (13) சனிக்கிழமை அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.
ஜெர்மன் நாட்டு வெளிவிவகார அமைச்சின் செயல்திட்டத்தின் கீழ் டெமோகரசி ரிப்போட்டின் இன்ரநெஸ்னல் ஸ்ரீலங்கா(Democracy Reporting International srilanka) அமைப்பின் அனுசரனையில் இப்பயிற்சி பட்டறை இடம்பெற்றிருந்தது.
அம்பாறை மாவட்டத்தில் சமூகமட்டத்தில் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பாடல்களை கொண்டுள்ள அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள்,இளையோர் அணிகள்,பல்கலைக்கழக மாணவர்கள் என பல்வேறுபட்ட தரப்பிலிருந்தும் இப் பயிற்சிக்கு உள்வாங்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
சமூகவலைத்தளங்களில் பொறுப்பற்ற முறையில் பதிவிடப்படும் போலிச்செய்திகள் மற்றும் வெறுப்பு பேச்சுக்கள் தொடர்பில் எவ்வாறு இனங்காண்பது? அவற்றை எவ்வாறு முறியடிப்பது என்பது தொடர்பிலும் வளவாளரால் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.இவ்வாறான செய்திகளை பரப்புவதில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் எவ்வாறு அமைந்துள்ளது? என்பது தொடர்பிலும் கலந்து கொண்டோரின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டது.
சமூக ஊடகங்கள் குறித்தான பயிற்சி பட்டறையானது அக்கரைப்பற்று மெங்கோ காடன்(mango Garden) ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. சட்டத்தரணி ஏ. ஐங்கரன் வளவாளராக கலந்து கொண்டதுடன் சமூக ஊடகங்கள் குறித்தான சந்தேகங்ககளை தெளிவுபடுத்தியிருந்தார்.டெமோகரசி ரிப்போட்டின் இன்ரநெஸ்னல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் நிதிப்பொறுப்பாளர் ஏ.ரெபேக்கா மற்றும் இணைப்பாளர் ஷிபானி மொஹமட் ஆகியோரும் இவ் செயலமர்வில் கலந்து கொண்டிருந்தனர்.