
தாமரைக் கோபுரத்தை நிர்மாணிக்க பெற்ற கடனைச் செலுத்த வேண்டுமாயின் தினமும் அந்த கோபுரத்தின் மூலம் 41 ஆயிரம் டொலர் அதாவது ஒரு கோடி 50 லட்சம் ரூபாவை சம்பாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டைப் பிரதேசத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தாமரைக் கோபுரத்தின் மூலம் 30 லட்சம் ரூபா வருமானம் கிடைத்தது என்று மகிழ்ச்சியடைய முடியாது. கடனை அடைக்க அதை விட பல லட்சம் ரூபாவை சம்பாதிக்க வேண்டும் என்பதே உண்மையான நிலவரம்.
தாமரை கோபுரத்தை நிர்மாணிக்க 10 கோடி 40 லட்சம் அமெரிக்க டொலர் செலவாகியுள்ளது.
அதை நிர்மாணிக்கப் பெற்ற கடனுக்கான வட்டி, காப்புறுதிக் கட்டணம் மற்றும் ஏனைய செலவுகளைக் கூட்டும் போது மேலும் 5 கோடி 60 லட்சம் டொலரை அடுத்த 5ஆண்டுகளில் செலுத்த வேண்டும்.- என்றார்.