தமிழ்நாட்டில் 73 லட்சம் பேர் வேலை வாய்ப்புக்காக பதிவு – தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

அவ்வாறு பதிவு செய்தோர், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ந் திகதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.   அதனடிப்படையில், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 23 லட்சத்து ஆயிரத்து 800 பேரும், அதேபோல் 19 முதல் 30 வயது வரை உள்ள பல தரப்பட்ட கல்லூரி மாணவர்களை பொறுத்த வரையில் 29 லட்சத்து 88 ஆயிரத்து 1 பேரும் பதிவு செய்து உள்ளனர்.

31 முதல் 45 வயது வரை அரசுப்பணி வேண்டி பதிவு செய்து காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 68 ஆயிரத்து 931 பேர் உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், 46 முதல் 60 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 2 லட்சத்து 35 ஆயிரத்து 190 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 ஆயிரத்து 590 பேர் பதிவு செய்து வேலைக்காக காத்து இருக்கின்றனர்.

அதேபோல், பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 704 பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 60 ஆயிரத்து 938 நபர்கள் என மொத்தம் 73 லட்சத்து 99 ஆயிரத்து 512 நபர்கள் பதிவு செய்து காத்திருப்பதாக வேலை வாய்ப்பு மற்றும் பதிவுத்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *