வன்னி விளாங்குளம் துயிலும் இல்லத்தில் பொலிஸார் அடாவடி! வீதியில் விளக்கேற்றிய உறவுகள்

முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் துயிலும் இல்லத்தில் மாலை 06 .05 மணிக்கு, சரியாக சுடர் ஏற்ற விடாது மாவீரர்களின் உறவுகளுக்கு பொலிஸார் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், உயிர்நீத்த தமது உறவுகளுக்கு வீதியோரத்தில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மேலும் தெரியவருகையில்,

வன்னிவிளான்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொலிசாரின் தடைகளுக்கு மத்தியில் இரு இடங்களில் அஞ்சலி இடம்பெற்றது.

கொரோனா நிலையை காரணங்காட்டி 50பேரை மாத்திரம் உள்ளே அனுமதித்துவிட்டு ஐம்பது மீற்றருக்கு அப்பால் பின்னர் வந்தவர்களை தடுத்து நிறுத்திய பொலிசார், முதலில் சென்றவர்கள் தீபமேற்றிவிட்டு வெளியேறிய பின் மீண்டும் ஐம்பது பேரை அனுப்புவதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து 06.05 மணிக்கே நாங்கள் அனைவரும் ஒன்றாகவே தீபமேற்ற வேண்டும் என்று கோரியபோதும் பொலிஸார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

அச்சமயத்தில் அவ்விடத்தில் நின்று ஒளிப்படம் எடுத்த ஊடகவியலாளர்களுடனும் பொலிசார் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர்.

இதற்கிடையே நேரம் நெருங்கிவரவே சுடர் ஏற்ற சென்ற எல்லோரும் ஒன்றாக சேர்ந்து துயிலுமில்ல முன்வீதியோரத்தில் பொலிசாரின் முன்னிலையிலேயே தீபங்களை ஏற்றி அஞ்சலிகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே மாவீரர்களின் பெற்றோரின் அழுகுரல்கள் “ரோட்டுக்கரையிலயா என்ற தெய்வத்துக்கு விளக்கேற்றவேணும்” “ஐயோ என்ர சாமி” என விம்மி அழுதவாறு சுடரேற்றி அஞ்சலித்துள்ளனர் .

இதேவேளை, மாவீரர் மதிவாணனின் தந்தை தர்மகுலசிங்கம் (கிளியன்) பொதுச்சுடரினை ஏற்றி வைக்க மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஈகைச்சுடர் ஏற்றி தமது அஞ்சலிகளை உணர்வுபூர்வமாக செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *