இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்காண இந்தியாவுடன் இணைந்து ஊக்கத்தை கொடுக்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வொசிங்டனில் இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்ட நிபுணர்கள் தூதுக்குழு அண்மையில் பேச்சு நடத்தியது. இதன்போதே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அமெரிக்கா மீண்டும் இணையவிருக்கும் நிலையில், தீர்வு காணப்படாமல் இருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் நீதிப் பிரச்சினைகளுடன் சேர்த்து தமிழ் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை வொசிங்டன் வலியுறுத்த வேண்டியது முக்கியமானதாகும்.
மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பான குழுவுக்கு ஐக்கிய இராச்சியம் தலைமை தாங்குகிறது.
ஜெனிவாவில் உள்ள பேரவையில் 2022 மார்ச்சில் நடைபெறவிருக்கும் கூட்டத்தொடரில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பாக எழுத்துமூல அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவிருக்கிறார்.
நீண்டகால உள்நாட்டு போரில் இருந்து இன்னமும் மீண்டுகொண்டிருக்கும் இலங்கையில் அரசியல் தீர்வொன்றுக்காக பேச்சுக்களில் பங்கேற்கும் பிரதான சர்வதேச பங்காளியாக இதுவரையில் இந்தியாவே விளங்கும்.
இதேவேளை, மேற்குலகவல்லாதிக்க நாடுகள் பொறுப்புக்கூறல் மற்றும் நீதி தொடர்பிலேயே அக்கறை காட்டுகின்றன.
புதிய அரசமைப்பு ஒன்றை வரைவதற்கான ராஜபக்ச அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மத்தியில் அரசியல் தீர்வொன்றுக்கான அவசர கோரிக்கைக்கு வலுச்சேர்க்க அமெரிக்காவை அழைக்கும் கூட்டமைப்பின் நகர்வு இடம்பெற்றிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.
அதன் காரணத்தால்தான் அரசமைப்பு வரைவு துறையில் நிபுணத்துவம் கொண்டவர்களை முழுவதுமாகக்கொண்ட தூதுக்குழு அமெரிக்கா சென்றது.
1987 ஜூலை இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையின் விளைவாக கொண்டுவரப்பட்ட இலங்கை அரசமைப்புக்கான 13ஆவது திருத்தம் ஓர் அவசியமான நடவடிக்கை. ஆனால், போதுமானதல்ல என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாகும். மாகாணங்களுக்கு ஓரளவு அதிகாரங்களை உறுதிப்படுத்துகின்ற அந்த திருத்தத்தை இலங்கை அரசாங்கங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.