
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை, ஐரோப்பாவின் சர்வதேச பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலிலிருந்து நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையொன்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
டென்மார்க்கை அடிப்படையாகக் கொண்ட விடுதலைப்புலிகளின் அரசியல் தரப்பினர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டையே, ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மேலும், சட்ட செலவுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் செலவுகள் ஆகியவற்றை செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2006 ஆம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தினால் முதன் முதலாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
அத்துடன், குறித்த அமைப்பின் ஆயுத போராட்டம் தோற்கடிக்கப்பட்டாலும் அந்த அமைப்புக்கு நிதி சேகரிப்பு மற்றும் மீள் உருவாக்கத் திறன் ஆகியன இன்னும் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரியில், விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்புப் பட்டியலில் மீண்டும் சேர்த்தது.
இந்நிலையிலேயே அதனை நீக்குமாறு கோரி மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.