காந்தீயம் அமைப்பின் செயற்பாட்டாளரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அதி சிரேஸ்ட உறுப்பினரும், பொதுச்செயலாளருமான அமரர் சுப்பிரமணியம் சதானந்தனின் (தோழர் ஆனந்தி அண்ணர்) நினைவஞ்சலி நிகழ்வும், ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் யாழ் நாச்சிமார்கோவிலடி சரஸ்வதி மண்டபத்தில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பா.கஜதீபன் தலைமையில், மௌன அஞ்சலியுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், சதானந்தன் நினைவுச் சுடரை ஏற்றி வைத்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தோழர் ஆனந்தி அண்ணரின் திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்தார்.
தொடர்ந்து கழகத்தின் மத்திய குழு உறுப்பினர் தோழர் குரு, வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம், தமிழ் தேசியக்கட்சியின் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் சுகு சிறீதரன் ஆகியோர் நினைவு உரை நிகழ்த்தினார்கள்.
இந் நிகழ்வில், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் உபதலைவர்கள், மத்திய குழு உறுப்பினர்கள், சிரேஸ்ட உறுப்பினர்கள், உறுப்பினர்கள், கட்சியின் நகரசபை பிரதேச சபை தவிசாளர்கள், அங்கத்தவர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் நகரசபை உறுப்பினர்கள், தோழர் ஆனந்தி அண்ணரின் உறவினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

