புத்தளம் – சிலாபம் புகையிரத சேவைகள் 21 நாட்களின் பின்னர் இன்று முதல் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன.
கடந்த 7 ஆம் திகதி பெய்த கடும் மழையினால் புத்தளம் மாவட்டம் வெள்ளத்தினால் மூழ்கியதுடன் பல வீதிகளும் தாழிறங்கி காணப்பட்டது.
புத்தளம் – சிலாபம் புகையிரத வீதியின் பல இடங்களில் புகையிரத பாதைக்கு மேல் வெள்ளநீர் மேவிப் பாய்ந்து சேதமடைந்துள்ளன.
முந்தல் – மங்கள எளிய அம்பலவெளி பகுதியில் உள்ள புகையிரத வீதி சுமார் 100 மீற்றர் தூரம் வரை கடுமையாக சேதமடைந்து காணப்பட்டது.
இவ்வாறு புகையிரத பாதை சேதமடைந்த காரணத்தினால், புத்தளம் – கொழும்பு புகையிரத சேவைகள் தடைப்பட்டிருந்தன.
தற்போது , கடுமையாக சேதமடைந்த புகையிரத பாதை சீரமைக்கப்பட்டதுடன், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் மேற்பார்வை செய்த பின்னர் புகையிரத சேவையை தொடர்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கொழும்பு கோட்டையிலிருந்து புத்தளம் ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பக்கட்டுள்ளதாக புத்தளம் புகையிரத நிலைய கடமைநேர அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.