யாழ் கோட்டையில் தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று செய்யப்பட்ட விடயமல்ல ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்டதே என நாவாந்துறை பங்குத்தந்தை யேசுரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகிலுள்ள கிறிஸ்தவ தேவாலய சொரூபங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
புனித அந்தோணியார் சிற்றாலயத்தில் உள்ள சொரூபங்கள், இன்று திங்கட்கிழமை அதிகாலை மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரால் சேதமாக்கப்பட்டுள்ளது
குறித்த செயலை செய்தவர் ஏற்கனவே எமக்கு அறிமுகமானவர்.
அவர் ஒரு மனநோயாளி, நீண்ட காலமாக இந்த ஆலயத்திலேயே தங்கியுள்ளார். நாங்கள் நீண்ட முறை அவர்களை வெளியேற்ற பார்த்தோம் ஆனால் அவர் போகவில்லை .
எனவே, இது வேண்டுமென்று செய்யப்பட்ட ஒரு விடயம் அல்ல ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்ட விடயமாகும்.
அவரை பொலிசாரால் நேரடியாக கைது செய்துள்ளார்கள் பின்னர் எனக்கு அறிவித்திருந்தார்கள்.
நான் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளேன்.
அதனுடைய தொடர்ச்சியான நடவடிக்கையினை பொலிசார் எடுப்பார்கள்.
இது தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடைய தேவையில்லை. கிறிஸ்தவ தேவாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என யாரும் குழப்பமடைய தேவையில்லை.
இது ஒரு மன நோயாளியினால் மேற்கொள்ளப்பட்ட செயல் என்பதனையும் வேண்டுமென்று செய்யப்பட்ட விடயமல்ல என்பதையும் நான் மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்- என்றார்.






