தேர்தல் காலத்தில் மாத்திரம் வாக்குகளை பெற வரும் மலையக அரசியல்வாதிகள் இனி வாக்கு கேட்டு வர வேண்டாம் எனவும் அதிகரித்த விலைவாசிக்கும் எதிர்ப்பு தெரிவித்து அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ் ஆர்ப்பாட்டம், இன்று திங்கட்கிழமை டொரிங்டன் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
தேயிலை மலையில் காணப்பட்ட நான்கு அடி, மூன்று அடி கொண்ட வளர்ந்த புற்களை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியும், பதாதைகளை ஏந்தியும் தங்களது எதிர்ப்பினை தோட்ட தொழிலாளர்கள் இதன்போதுவெளிப்படுத்தினர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
தோட்ட நிர்வாகம் தற்போது வேலை நாட்களை குறைத்துள்ளதோடு, தேயிலை செடிகளை பராமரிப்பதிலிருந்து கைநழுவி விட்டதால் தேயிலை மலைகள் காடாகி காணப்படுகின்றது.
இதன் காரணமாக தொழிற் செய்ய முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு, தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், நிர்வாகம் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதாக இருந்தால் கட்டாயமாக 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறு நிர்வாகத்தால் நிர்ணயக்கப்படும் கொழுந்தினை பறிக்க முடியாத சூழ்நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் குறிப்பிட்டனர்.
அத்தோடு, தேயிலை செடிகளில் கொழுந்தின் விளைச்சல் பாரிய சரிவை ஏற்பட்டதன் காரணமாக 20 கிலோ கொழுந்து பறிக்க முடியாத நிலை காணப்படுகிறது.
அதற்கு குறைவாக கொழுந்து பறித்தால் ஒரு கிலோவுக்கு 40 ரூபா வீத சாரத்தில் சம்பள கணக்கு முடிப்பதால் மாத வருமானம் மிகவும் குறைவடைந்து.
குடும்ப செலவினை கட்டுப்படுத்த முடியாத இக்கட்டான நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக தங்களது ஆதங்களை வெளிப்படுத்தினர்.
மேலும், திடீரென கோதுமை மாவின் விலையை அதிகரிக்கப்பட்டுள்ளதால், தாம் ஒவ்வொரு நாளும் தயாரிக்கப்படும் உணவு வகைகளை உட்கொள்வதில் மேலும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளோம்.
தோட்ட நிர்வாகமும் தேயிலை மலைகளுக்கு உரம், மருந்து தெளித்தல், துப்பரவு செய்தல் போன்ற காரியங்களை செய்வதில்லை.
இவ்வாறான நிலைமையால் தாம் சொல்லல்லா துயரங்களை அனுபவித்து வருவதாக தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், அரசாங்கம் தமது பிரச்சினைகளை கண்டு கொள்வதில்லை, மலையக அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் மாத்திரம் வாக்குகளை பெறுவதற்கு வருவதாகவும், இனி வாக்கு கேட்டு வர வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.
இதன்போது, தமக்கு உடனடியாக நல்ல தீர்வினை பெற்றுத் தர சம்மந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை, பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட இத் தொழிலாளர்கள், தற்போது பொருட்களின் விலையை அரசாங்கம் அதிகரித்துள்ளதால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.