12 வயதுச் சிறுவனைத் தாக்கி விரட்டிய தாய் கைது!

12 வயது மகனை வீட்டில் இருந்து அடித்து விரட்டிய குற்றச்சாட்டில் தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு, கொடிகாமத்தில் நடந்துள்ளது.

பெண்ணின் கணவர் இரு மாதங்களுக்கு முன்னர் காலமாகியுள்ளார். நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் இருந்த மகனை தாய் வீட்டில் இருக்க வேண்டாம் என்று அடித்து விரட்டியுள்ளார் என்று கூறப்படுகின்றது. சிறுவன் இரவு முழுவதும் வீதியில் நின்றுள்ளார். நேற்றுக்காலை கொடிகாமம் பொலிஸ் நிலையம் சென்று இது தொடர்பில் முறையிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

விசாரணைகளை மேற்கொண்ட கொடிகாமம் பொலிஸார், நேற்று மதியம் தாயைக் கைது செய்துள்ளனர். சிறுவன் பொலிஸ் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை, கடந்த 7ஆம் திகதி தாய் தாக்கியதில் சிறுவன் ஐந்து நாள்களாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்றும் கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட தாயை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *