தனிநபர் ஒருவரின் தானியங்கி பணக் கொடுக்கல் வாங்கல் அட்டையை எடுத்து சுமார் 6 லட்சம் ரூபாய் பணத்தை திருடிய இருவரது படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், இவர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
உரும்பிராயின் தனிநபர் ஒருவரின் வங்கிக் கணக்கின் தானியங்கி பணப்பரிமாற்றல் அட்டை காணாமற்போனமை தொடர்பில் வங்கிக் கணக்கிலிருந்து சுமார் 6 லட்சம் ரூபாய் நிதி மீளப்பெறப்பட்டுள்ளது.
இதையடுத்து, வங்கியை நாடியதுடன், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் வழங்கினார்.
இந்நிலையில், வங்கியின் உதவியுடன் பணத்தை மீளப்பெற்ற இருவர் தொடர்பான ஒளிப்படங்களைப் பொலிஸார் பெற்றுக்கொண்டனர்.
இச் சம்பவம் இடம்பெற்று சில மாதங்கள் கடந்துள்ள நிலையில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்படாத காரணத்தால், பொதுமக்களின் உதவியைக் கோருவதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பழிகக்கார கேட்டுள்ளார்.
குறித்த நபர்கள் தொடர்பான தகவல்களை ஏதாவது தெரிந்தால் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 0718591329 என்ற அலைபேசிக்குத் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.








