யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா மற்றும் செயலாளர், பொருளாளர், உப தலைவர் ஆகியோர் இன்று இந்திய துணைத்தூதுவரை யாழ். இந்திய துணைத்தூதுவராலயத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பு தொடர்பில் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சம்மேளனத் தலைவர் அன்னராசா கருத்து தெரிவிக்கையில்,
யாழ். மாவட்ட மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையால் மிகவும் பாதிக்கப்படுகின்றார்கள். அத்துமீறிய சட்டவிரோத இந்திய மீனவர்களின் பாதிப்பு எங்களுடைய மீனவ பரம்பலில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீனவ சமூகத்தில் மீனவர்கள் கூலி தொழிலுக்கு செல்லக் கூடிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதோடு, குடிப்பரம்பல் குறைக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகைக்கு எதிராக பல போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டும் தற்போதும் இந்திய மீனவர்களின் வருகை பருத்தித்துறை மற்றும் நெடுந்தீவு பிரதேசங்களில் அதிகரித்துக் காணப்படுகின்றன.
இந்த அத்துமீறிய வருகையை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகிறோம். அந்த வகையில் இன்று யாழ் இந்தியத் துணைத்தூதரைச் சந்தித்து பேசியுள்ளோம் எனத் தெரிவித்தார்.






