இலங்கைத் தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதற்கு தடை !

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட இலங்கைத் தாய்மார்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதைத் தடைசெய்யும் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக சிறுவர் மற்றும் பெண்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

சிறுவர் உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் அறிஞர்கள் சிறுவர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் வழங்கிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு இந்த திருத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் தாய்மார்களின் குழந்தைகளின் குறைந்தபட்ச வயதை 2 ஆண்டுகள் குறைக்கவும், அதுவரை அத்தியாவசியமாக இருந்த குடும்பப் பின்னணி அறிக்கையை சமர்பிப்பதை இனி கட்டாயமாக்கவும் ஜூன் 27ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

குழந்தைகளின் ஆரம்பக் குழந்தைப் பருவ வளர்ச்சியில் தாய்மார்கள் முக்கிய பங்கு வகிப்பதால், தாய் இல்லாத முதல் 5 வருடங்களில் குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் என்றும் அமைச்சர் கீதா குமாரசிங்க குறிப்பிட்டார்.

இதன்படி வெளிநாடு செல்லும் தாய்மார்கள் சமர்ப்பிக்க வேண்டிய குடும்பப் பின்னணி அறிக்கையை கட்டாயமாக்கக் கூடாது எனவும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட தாய்மார்களை வெளிநாடு செல்ல அனுமதிக்கும் தீர்மானத்தை மீளாய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *