தேசிய பூங்காவிற்குள் தனியார் வாகனங்கள் உட்பிரவேசிக்க தடை!

சஃப்பாரி வழிகாட்டுதல் இன்றி எந்தவொரு தேசிய பூங்காவிற்குள்ளும் தனியார் வாகனங்கள் உட்பிரவேசிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

யால சரணாலயத்திற்குள் உட் பிரவேசித்து விலங்குகளுக்கு சிலர் இடையூறு விளைவித்த சம்பவத்திற்கு பின்னர், இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், யால சரணாலயத்திற்குள் பிரவேசித்து விலங்குகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சட்டவிரோதமாக செயற்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த தரப்பினர் அதிவேக வீதி சட்டத்தை மீறி பயணித்ததாக வெளியாகும் காணொளியை மையப்படுத்தி இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கமைய, அதிவேக வீதியின் சீ.சீ.ரி.வி காணொளிகளை பரிசீலிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யால சரணாலயத்தில், விலங்குகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஜீப் ரக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 9 பேர் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அதேநேரம், சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக வனஜீவராசிகள் அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்ட குழு இன்று யால சரணாலயத்திற்கு பிரவேசித்து விசாரணைகளை முன்னெடுத்தது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் மற்றும் வாகனங்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

பிற செய்திகள்

Leave a Reply