கந்தக்காடு சம்பவம்: தப்பிச்சென்ற 33 பேர் தொடர்பில் வெளியான தகவல்!

பொலன்னறுவை – கந்தக்காடு சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது தப்பிச் சென்றவர்களில் 33 பேர் தொடர்பில் இன்னும் தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது.

மோதல் சம்பவத்தின் போது காயமடைந்த 5 பேர் வெலிகந்தை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரவீ ஹேரத் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மோதல் ஏற்பட்ட போது, 547 பேர் கந்தக்காடு சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்துள்ளனர்.

மோதலின் போது தப்பிச் சென்ற மற்றும் அதனுடன் தொடர்புடைய 211 பேர் சட்ட நடவடிக்கைகளுக்காக காவல்துறையினர் பொறுப்பேற்றுள்ளனர்.

அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். கைதிகள் இருவர் நீராடச் சென்ற போது ஏற்பட்ட வாய்த்தர்க்கமே மோதலாக மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதலுடன் தொடர்புடைய தரப்பினர் கந்தக்காடு சிகிச்சையளிப்பு மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஆயுத களஞ்சியசாலைக்கு நுழைய முற்பட்டுள்ளனர்.

அதனை தடுப்பதற்காக பாதுகாப்பு தரப்பினர் வான் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து, மோதல் நிலை தீவிரமடைந்ததாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரவீ ஹேரத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply