மாலைத்தீவு தலைநகர் மாலேயில், கட்டடமொன்றில் இன்று (10) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த பணியாளர்கள் வசிக்கும் கட்டடமொன்றிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் 9 இந்தியர்களும் ஒரு பங்களாதேஷ் பிரஜையும் உயிரிழந்ததாக மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் உறுதி செய்துள்ளார்.
மாலைத்தீவு தேசிய பாதுகாப்பு படையும், வளாகத்தில் 10 உடல்கள் மீட்கப்பட்டதாக கூறியுள்ளது.
மாலைத்தீவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் இந்த தீ விபத்து தொடர்பில் வருத்தம் தெரிவித்துள்ளது.
உடல்கள் கடுமையாக எரிந்துள்ளதால், அவற்றை அடையாளம் காண்பது கடினமாக இருப்பதாக அதிகாரிகள் கூறியதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.